Thursday, March 8, 2012

பா.ஜ.க, காங்கிரசுக்கு மாற்று இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது – சி.பி.எம்

cpm
புதுடெல்லி:5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாரதீய ஜனதா ஆகமுடியாது என்பது நிரூபணமாகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ(அரசியல் விவகார குழு) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.


மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பது:5 மாநிலங்களில் நடைபெற்றத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி மிக மோசமாகத் தோல்வியடைந்துள்ளது. இந்த மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்த ஒருங்கிணைந்த மற்றும் அமைப்புரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி பெற்றுள்ள வெற்றியானது வியப்பான ஒன்றாகும். அம்மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் மாயாவதி அரசுக்கு எதிராக அளிக்கப்பட்டது மட்டுமல்ல. காங்கிரசையும், பாஜகவையும்தான் மக்கள் நிராகரித்துள்ளனர். மக்கள் காங்கிரசை நிராகரித்ததற்குக் காரணம், மத்தியில் ஆளும் அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசின் கொள்கைகளால் உயர்ந்துள்ள விலைவாசி மற்றும் ஊழல் ஆகியவையேயாகும்.

பாஜக பஞ்சாபில் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைவுதான். உத்தரகண்டில் அக்கட்சி ஆட்சியை இழந்துள்ளது. உத்தரப் பிரதேசத்திலும் அக்கட்சி சிறப்பான முடிவுகளைப் பெறவில்லை. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளையும் ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்தால் காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவுதான். கோவாவில் ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ் கட்சி, உத்தரகண்டில் ஒரே ஒரு தொகுதி வித்தியாசத்திலேயே முன்னிலையில் உள்ளது. மணிப்பூரில் நிலவும் அசாதாரண சூழலினால் அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதில் குறிப்பிடும்படி ஏதுமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment