Tuesday, March 6, 2012

அறியாமையின் உச்சத்தில் காயல்பட்டினம்!


 
  தூத்துக்குடி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஊர்தான் காயல்பட்டினம்.

இது படிப்பறிவு பெற்ற மக்களை, பெரும் செல்வந்தர்களை, தொழில் அதிபர்களை கொண்ட ஒரு ஊர். இவர்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு வியாபாரங்கள் மற்றும் வேலைகளில் பரவிக்கிடந்து அளப்பரிய அந்நிய செலவாணியை இந்தியாவுக்கு கொண்டு  வருபவர்கள்.


ஒரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த அறிஞர்கள் மக்கள் பணிகளில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். அப்படிப்பாட்ட ஊரில் இருந்து சிலர்  நமது விஞ்சான வடிவேலு அபுல் கலாமின் தம்பிகள் ஆகி கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர்.


அபுல்கலாம் கூடங்குளம் மக்களுக்கு 500 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மனை, அடுக்குமாடி பசுமை வீடுகள், இன்டர்நெட்டு, பிராடு பேண்டு என்று தேர்தல் வாக்குறுதியை விட கேவலமாக வாக்குறுதிகளை அள்ளி விசினார். ஆனால் இதையெல்லாம்  ஏனோ போபாலில் விசவாய்வு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஜனாதிபதியாக இருந்தும்  வழங்கவில்லை.  அணு குண்டையும் அதே நேரம் குழந்தைகளையும் நேசிக்கும் ஒரே அதிசய விஞ்சானியின் தம்பிகளாக காயல்பட்டினம் மக்களில் சிலர் மாறி கூடங்குளம் அணு உலை வேண்டும் என்ற போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.


கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று காயல்பட்டினம்  முஸ்லிம் லீக் கட்சி ( இவர்கள்தான் நாக்பூரில் பிஜேபிக்கு பஞ்சாயத்து தேர்தலில் ஆதரவு கொடுத்தவர்கள்)  கூட்டிய கூட்டத்தில் காயல்பட்டினத்தின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள்,  குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சி, SDPI ஆகியவற்றின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டார்கள். வேடிக்கை என்னவென்றால் இதில் பிஜேபியும் கலந்து கொண்டது. இந்த கூட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்றும் அதற்காக ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் வருகிற மார்ச் 6  தேதி நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.


தமிழக அளவில் உள்ள எந்த கட்சிகளோ, அமைப்புகளோ இந்த ஊரில் மட்டும் தங்களது வீரியத்தை இழந்து விடும் ஒரு அவல நிலைமை தற்போது நிலவி வருகிறது. மாநில அளவிலான மனித நீதி மக்கள் கட்சி, மத்திய அளவிலான SDPI கட்சி, போன்றவற்றின் தலைவர்களும், முக்கிய பொறுப்பாளிகளும் அணு உலை என்பது ஆபத்து என்பதை உணர்ந்துள்ளனர்.  SDPI கட்சியின் மாநிலத்தலைவர் தேகலான் பாக்கவி கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர். தங்கள் கட்சி கூடங்குளம் அணு மின் நிலையத்தை தொடர்ந்து  கடுமையாக எதிர்க்கும் என்று பல கூட்டங்களில் தெரிவித்துள்ளார்.


அதுபோல் மனித நீதி கட்சியின் தலைவரும் ராமநாதபுர எம்.எல்.எ. வுமான ஜாவாஹிருல்லா கூடங்குளம் அணு உலை குறித்தும் அதன் தீமைகள் குறித்தும் கூடங்குளம் உண்ணாவிரத போராட்ட பந்தலிலேயே பேசினார். மேலும் அதனை தங்களது கட்சியும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் கடுமையாக எதிர்ப்பதாக குரல் கொடுத்தார். நிலைமை இப்படி இருக்க காயல்பாடினத்தை சார்ந்த இந்த கட்சிகளின் கிளைகள் மட்டும் தலைமையின் கருத்து மாறுபட்டு தங்கள் ஊர் என்கிற ஒரு குறுகிய மாயையில் அணு உலையை திறக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளனர். ஹிந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் முஸ்லிம் லீக்குக்கு இவர்கள் துணை போயி இருக்கிறார்கள்.


இதுபோல் இவர்கள் செய்யும் காரியம்  காயல்பட்டினத்து மொத்த மக்களையும் சுயநலம் கொண்டவர்களாக உலகுக்கு காட்டும் ஒரு விசயமாகும்.  இந்த கட்சிகள், சங்கங்கள் இந்த  நாசகார அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அதை ஆதரித்து குரல் எழுப்புவதே இங்கு கண்டனத்துக்கு உரியது. இதே காயல்பட்டினம் மக்கள்தான் dcw என்கிற தாரங்கதார கெமிக்கல் வொர்க்ஸ் என்கிற நிறுவனத்தை கடுமையாக் எதிர்த்தார்கள். இதனால் தங்கள் ஊருக்கு பாதிப்பு உண்டாகும் என்று சொல்லி  உலகம் முழுவதும் வாழும் காயல்பட்டினம் மக்களை கொண்டு அங்குள்ள இந்திய தூதரகங்களில் மனுக்களை கொடுக்க செய்தார்கள்.


இச்செயலை  நாமும் வரவேற்கிறோம். ஆனால் அதை விட மோசமான ஒன்றுதான் அணு உலை. மேலும் அணு மின் நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர்கள் காயல்பட்டினத்திற்கு வசூலுக்காக வந்த போது ஓடக்கரை ஹிந்து முன்னணியை சேர்ந்த சுகு என்கிற சுகுமாரன் அவர்களை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த ஓடக்கரை சுகுதான் காயால்பட்டினத்து மக்களுக்கு பல வழிகளில் கேடுகளையும், துயரங்களையும் ஏற்படுத்தியவர். பல சமயங்களில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில்  காயல்பட்டினத்தில் மதகலவரம் உண்டாக்கியவர் என்று நம்பாபடுபவர். இப்படி இருக்க வசூலுக்கு வந்த அப்பாவி கூடங்குளம் மக்களை இந்த சுகு தாக்கும்போது காயல்பட்டினம் மக்களில் பலர் வேடிக்கை பார்த்துள்ளனர்.


நமக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக நாசகார திட்டம் என்று தெளிவாக தெரிந்த ஒரு திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கலாமா? இதை நியாய உள்ளம் கொண்ட காயல்பட்டினம் மக்கள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான பிரச்சாரங்கள் முடிக்கி விடப்பட வேண்டும். மனித நீதி மக்கள் கட்சி, மற்றும் SDPI  போன்ற கட்சிகளின் மாநில தலைவர்கள் உடனே சம்மந்தபட்ட காயல்பட்டின கிளை நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாது அணு உலைக்கு எதிரான போராட்டங்களை காயல்பட்டினத்தில் தெரு முனை பிரச்சாரங்கள், மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் முடுக்கிவிடப்பட வேண்டும். நல்ல விசயங்களுக்கு முன்னோடிகளாக திகழும் காயல்பட்டினம் மக்கள் இதை செய்வார்கள் என்று நம்புவோம்.
 
 நன்றி புதிய தூது

No comments:

Post a Comment