Saturday, March 10, 2012

ஹிந்துத்துவா தீவிரவாதம், பொறுப்பற்ற ஊடகங்கள்: இந்தியாவின் சூப்பர் பவர் கனவு அம்பேல்! ஆய்வில் தகவல்!

India is not a superpower (and may never be) concludes new LSE study
லண்டன்:உலகில் வல்லரசாக மாறவேண்டும் என்று கனவு காணும் இந்தியாவின் விருப்பம் அவ்வளவு எளிதாக நிறைவேறாது என்றும், அதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கணாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயன்ஸ் ஆய்வு இந்தியாவின் கனவுகளுக்கு கரி நிழலை சாத்துகிறது.

ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி ஆகிய விஷயங்களில் இந்தியா வெகுவாக முன்னேறிய பொழுதும் உள்நாட்டு பிரச்சனைகள்தாம் இந்தியாவின் சூப்பர் பவர் நம்பிக்கைக்கு தடைகற்களாக மாறியுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
தீவிரமான ஊழல், திறமையற்ற ஆட்சியாளர்கள், பணக்காரர்-ஏழை இடைவெளி, சமூக மோதல்கள், உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், மத தீவிரவாதம் ஆகியன பலகீனத்திற்கு காரணமான காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, நிர்வாகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், சமூகம் ஆகிய துறைகளில் விரிவான ஆய்வை நடத்தி ஒன்பது வல்லுநர்கள் இணைந்து இந்தியா அடுத்த வல்லரசா? என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர்.
உள்நாட்டு பலகீனங்களில் உழலும் இந்தியாவுக்கு உலக வல்லரசு என்ற தகுதியை பெறுவதோ, சீனாவின் செல்வாக்கிற்கு இணையாக மாறுவதோ எளிதானதல்ல என அந்த ஆய்வு கூறுகிறது. நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் சூப்பர் பவரை குறித்து கனவு காண்பது என்பது இந்தியாவுக்கு உகந்தது அல்ல என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
லண்டன் ஸ்கூல் வரலாற்றுப் பிரிவில் பேராசிரியர் ராமச்சந்திர குஹா, ராஜீவ் சிபல், இஷ்கந்தர் ரஹ்மான், நிகோலஸ் ப்ளேரல், ஓலிவர் ஸ்ட்ரூங்கல், ஹாரிஸ் வாங்கடே, முகுலிகா பானர்ஜி, ஆண்ட்ரூ சாஞ்சஸ் மற்றும் சந்தீப் சென்குப்தா ஆகியோர் ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் ஆயுத போராட்டம், தீவிர ஹிந்துத்துவா வாதிகளின் வகுப்புவாத மனோபாவம், தரமில்லாத அரசியல் தலைமை, பொறுப்புணர்வு இல்லாத ஊடகங்கள், வளங்கள் அளவுக்கு அதிகமாக சுரண்டப்படல், அரசியல் கூட்டணிகளின் காரணமாக உருவாகும் பொருத்தமில்லாத கொள்கைகள் ஆகியன இந்தியாவின் முக்கிய சவால்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பன்முகத் தன்மையில் ஒருமை என்ற இந்தியாவின் சிறப்பை பாதுகாக்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றின் பழுதுகளை சரி செய்வதும், புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரே வழியாகும். இது கடினமான தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அதிக காலம் தேவைப்படும் பணியாகும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதார பலம் பிரதிபலிக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று பொருளாதார வல்லுநர் டி.ராஜீவ் சிபல் கூறுகிறார்.
சர்வதேச அளவில் தீரமிக்க முடிவுகளை எடுக்காமல் தயங்கி நிற்கும் இந்தியாவின் முன்னால் வளர்ச்சி சிரமமானது என்று இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை குறித்து ஆய்வுச் செய்த ஓலிவர் ஸ்ட்ரூங்கல் கூறுகிறார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment