புதன்கிழமை, 07 டிசம்பர் 2011 03:27 வாசிப்புக்கள்: 169 பகுதி: செய்திகள் - உலக செய்திகள்
உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களது பட்டியலை ஜோர்தானின் தலைநகரான அம்மானில் உள்ள அரச இஸ்லாமிய மூல உபாய கற்கைகள் மையம் வெளியிட்டுள்ளது.
2009 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பட்டியல் முயற்சி மூன்றாவது முறையாக 2011 இல் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள, முஸ்லிம்-கிறிஸ்தவ புரிந்துணர்வுக்கான இளவரசர் வலீத் பின் தலால் மையத்தின் ஒத்துழைப்புடன் இந்த அறிக்கை வருடாந்தம் வெளியிடப்பட்டு வருகின்றது.
இதில் முதலிடத்தில் சவூதி அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸும், இரண்டாவது இடத்தில் மொரோக்கோ மன்னர் ஆறாவது முஹம்மதும், மூன்றாவது இடத்தில் துருக்கிப் பிரதமர் ரஜப் தையிப் அர்துகானும் உள்ளனர்.
நான்காவது இடத்தில் ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ்வும் ஐந்தாவது இடத்தில் ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கெமைனியும் உள்ளனர்.
ஆறாவது இடத்தில் கட்டார் அமீர் ஷெய்க் ஹமத் பின் கலீபா அல்தானி உள்ளார்.
இதன் முதல் பத்து இடங்களுள் உலக முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவர் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவியும் ஷெய்குல் அஸ்ஹர் கலாநிதி அஹ்மத் அல் தையிபும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறபு புரட்சி நடந்ததன் பின்னர் வெளிவந்துள்ள இந்த பட்டியலில், அரசியல் தலைவர்களுக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரச ஆதரவு நிறுவனங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பட்டியலின் வரிசைகள் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment