Tuesday, January 24, 2012

ஈரான் எண்ணெய்க்கு ஐரோப்பிய யூனியன் தடை

CAXAHJ7F
ப்ரஸ்ஸல்ஸ்:ஈரானின் அணுசக்தி திட்டத்தை கண்டித்து அந்நாட்டின் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு ஐரோப்பிய யூனியன் தூதர்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் அங்கீகாரம் அளித்துள்ளது.
புதிய ஒப்பந்தங்களை முடக்கி வைக்கவும், பழைய ஒப்பந்தங்களை ஜூலை 1-ஆம் தேதி வரை தொடரவும் முடிவுச் செய்யப்பட்டது. ஈரானின் 20 சதவீத எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்யப்படுகிறது. ஈரானின் மத்திய வங்கி மீது கூடுதல் தடைகளை விதிக்கவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், ஈரானின் எண்ணெய்க்கு தடைவிதிப்பது கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவரும் இத்தாலி, க்ரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னடைவாகும்.
தங்களின் ஏற்றுமதிக்கு தடைவிதித்தால் வளைகுடாவின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல் வழியான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவோம் என நேற்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பாவிற்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், எண்ணெய் விலை அதிகரித்து ஐரோப்பாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் ஈரானின் முன்னாள் உளவுத்துறை அமைச்சர் அலி ஃபல்லாஹியான் கூறியுள்ளார்.
பிரச்சனைக்கு தீர்வுகாண ஈரானுக்கு வல்லுநர் குழுவை இம்மாதம் 29-ஆம் தேதிக்கும் 30-ஆம் தேதிக்கும் இடையே அனுப்புவோம் என சர்வதேச அணுசக்தி ஏஜன்சி அறிவித்துள்ளது.
அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக நிர்பந்திக்கவே இத்தடை என ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கையின் தலைவர் காதரின் அஷ்டன் தெரிவித்துள்ளார். அக்டோபரில் பேச்சுவார்த்தை நடத்துவதுக் குறித்த மேற்கத்திய நாடுகளின் கோரிக்கைக்கு ஈரான் பதிலளிக்கவில்லை என காதரின் தெரிவித்தார்.
அதேவேளையில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களான யு.எஸ்.எஸ் ஆப்ரஹாம் லிங்கன், பிரிட்டன் மற்றும் பிரான்சின் போர்க் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வளைகுடாவிற்கு சென்றுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment