Monday, January 30, 2012

எண்ணெய்க்கு தடை: மனரீதியான போர் – ஈரான்

IRAN
டெஹ்ரான்:ஈரான் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்துள்ள புதிய எண்ணெய் தடை மன ரீதியான போர் என ஈரான் அறிவித்துள்ளது.
ப்ரஸ்ஸல்ஸில் திங்கள் கிழமை நடந்த ஐரோப்பிய யூனியனின் கூட்டத்தில் ஈரான் மீது புதிய எண்ணெய் தடை பிரகடனப்படுத்தப்பட்டது. ஈரானில் இருந்து 20 சதவீத எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் இறக்குமதிச் செய்கின்றன. சர்வதேச அழுத்தத்தை புறக்கணித்து அணு சக்தி திட்டத்தில் உறுதியாக இருக்கும் ஈரான் தங்கள் வழிக்கு கொண்டுவர புதிய தடையை ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ளன. எண்ணெய் தடையுடன் வங்கித்துறையிலும் கடுமையான தடைக்கு ஐரோப்பிய யூனியன் தீர்மானித்துள்ளது.
இதுக்குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மெஹ்மான் பெரஸ்த் கூறியது: ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்துள்ளன. ஈரானுக்கு நிர்பந்தம் அளிக்கவும், அச்சுறுத்தவும் தடையை ஏற்படுத்திய செயல் அநீதமானது. தடை ஏற்படுத்தும் சவால்களை எதிர்கொள்ள ஈரான் தயார். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வரவேண்டும். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு கட்டுப்படாமல் சொந்தமாக முடிவு எடுக்கவேண்டும். அமெரிக்காவின் விருப்பத்திற்கு இணங்க ஈரானின் எரிசக்தி சந்தையில் இருந்து விலகுபவர்களுக்கு தாமதம் இன்றி பதில் ஆட்கள் வருவதை காண்பதற்கான வாய்ப்பு ஈரானுக்கு உருவாகும் என்று பெரஸ்த் கூறினார்.
அதேவேளையில் ஈரான் மீது தடையை ஏற்படுத்தியதற்கு ஐரோப்பிய யூனியனுக்கு ஒபாமா நன்றி தெரிவித்தார். ஈரானின் அணு சக்தி திட்டம் எழுப்பும் சவால்களை தடுக்க கூடுதல் வலுவான தடைக்கு தயாராகவேண்டும் என ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். ஈரானின் பொதுத்துறை வங்கிகளான தெஜராத் வங்கி, ட்ரேட் காபிட்டல் வங்கி ஆகியவற்றின் மீது கடுமையான தடையை விதிக்கவேண்டும் என ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
ஈரானிடமிருந்து அதிக அளவிலான எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளான இத்தாலி, க்ரீஸ், ஸ்பெயின் ஆகியவற்றின் பொருளாதார நிலையை இத்தடை பெரிதும் பாதிக்கும் என அல்ஜஸீராவின் செய்தியாளர் நிக் ஸ்பைஸர் கூறுகிறார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment