27 Feb 2012
கெய்ரோ:வெளிநாட்டு பணத்தை உபயோகித்து எகிப்தில் பிரச்சனையை உருவாக்க முயன்றதாக குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்த 19 அமெரிக்கர்கள் உள்பட 43 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் மீதான விசாரணை துவங்கியுள்ளது.
14 எகிப்தியர்கள் மட்டுமே நேற்று நடந்த விசாரணையின் போது ஆஜரானார்கள். இவர்களிடம் குற்றப்பத்திரிகையை வாசித்து காட்டிய பிறகு வழக்கு விசாரணையை நீதிபதி ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களை கைது செய்தது அமெரிக்காவுடனான எகிப்தின் உறவை பாதித்தது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களை விடுதலைச் செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை எகிப்து நிராகரித்துவிட்டது. இதனால் 130 கோடி டாலர் ராணுவ உதவித் தொகையை வழங்கமாட்டோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
அதே வேளையில் தன்னார்வ தொண்டர்களின் விடுதலைக்காக அமெரிக்கா எகிப்திய அரசுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து நிதியுதவியை பெற்று எகிப்தில் மோதல் சூழலை உருவாக்கியதாக குற்றஞ்சாட்டி தன்னார்வ தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை கைது செய்ததற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் வகையில் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, நார்வே, ஜோர்டான், ஃபலஸ்தீன், லெபனான் ஆகிய நாடுகளைச் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் 43 பேர் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment